Tuesday, January 14, 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏      19 -12- 19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கவிமலரில் இராவணனின் இளைய மகனாகிய அட்ச குமரனின் பாத்திரப்படைப்பை படித்து மகிழ்வோம்.

இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த இளைய மகன்.

இளைய மகனாக இருந்தாலும் இந்திர ஜித்துக்கு இணையாக தோற்றத்திலும்,வீரத்திலும் சிறந்து விளங்கியவன்.

ராவணனின் பிள்ளைகள் தந்தை செய்த தவறுக்காக போர்க்களத்தில் தம் உயிரை விட்டவர்கள்.

தந்தையின் புகழைக் காப்பாற்றவும்,தம் குல மானத்தைக் காப்பாற்றவும் வீர மரணம் அடைந்த கடமை வீரர்கள்.
அம் முறையில் தான் அட்ச குமரனையும் பகிர்ந்துகொள்கிறோம்

அட்ச குமரன் திருமணம் ஆனவனாகத் தெரியவில்லை.
மனைவியோ,பிள்ளைகளோ இருப்பதாக கம்பனில் குறிப்பு இல்லை.

இராவணன் தம் வாழ்நாட்களில் இரு பெரும் போர்களை சந்தித்துள்ளான். முதல் போர்
திசைதோறும் சென்று இந்திரன் உள்ளிட்ட தேவர்களை வென்று பெருமையுடன் விளங்கிய பெரும்போர்.

அப்போரில் இராவணனுக்கு துணையாக அரக்கர் குல வீரர்கள் பலர் போர் புரிந்து புகழ்பெற்றார்கள்.
ஆனால் அட்ச குமரன் அப்போரில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

அட்ச குமரன் தன் தந்தையின் மீது அளவு கடந்த பாசமும்,விநயம் உடையவனாகவும் இருந்தவன்.

            காட்சி

அநுமன் அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு பிறகு ராவணனின் கருத்தை அறிவோம் என எண்ணி இலங்கை நகருக்குள் புகுகிறான்
இலங்கையில் உள்ள சோலைகளை அழிக்கிறான்.

இதனை அறிந்த ராவணன் மிகுந்த சீற்றம் கொண்டு தம் படைத்ததலைவர் ஐவரை அனுப்ப,அவர்களையும் அழித்து ஒழித்தான் அநுமன்.

இதனை அறிந்த ராவணன் தன் தோள்களை குலுக்கிக் கொண்டு தாமே சென்று அநுமனைப் பிடித்து வருவதாக கூறி எழுந்தான்.

அட்ச குமரன் தந்தையைத் தடுத்து தன்னை அனுப்புமாறு வேண்டுகிறான்.

அரசே! நீ சிவபெருமான் வாகனமாகிய காளையுடன் போரிடலாம்; திருமாலின் வாகனமாகிய கருடனோடு போர் புரியலாம்;அல்லது அவன் படுத்துறங்கும் ஆதி சேடனாகிய பாம்போடு போரிடலாம். அச் செயல்கள் எல்லாம் கூட உனக்கு குறை ஆகாது.
அற்பக் குரங்கோடு நீங்கள் போர் புரிந்து உங்கள் பெருமைக்கு குறை தேடிக் கொள்ளலாமா!
*முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன்* *ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல்* *திக்கயம் அல்லதேல் புன் குரங்கின் மேல் சேறி போலாம்!* *இக்கடன் அடியேற்கு ஈதி;இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய்!* 

 *திறன் அறிந்து சொல்லுக சொல்லை* என்ற வாக்கிற்கேற்ப  ஒருவன் பேசக் கூடிய சொற்கள்தான் அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கி நிற்கும். 

அட்ச குமரனின் பேச்சில் வெற்று ஆரவாரம் இல்லை;ஆணவமும் தற்பெருமையும் இல்லை, கண்ணியமும்,தந்தையின் மேலுள்ள கனிவுமே விளங்குகிறது.
இந்த வேலையை என்னிடம் கொடுத்துவிட்டு கவலை இல்லாமல் நீங்கள் இருங்கள்! மேலும் இந்திரனோடு நடந்த போருக்கு என்னை அனுப்புவீர்கள் என்று இருந்தேன்.
அந்த மனக்குறை இன்றும் எனக்கு உண்டு. அந்த என் மனக் குறையை போக்கிக் கொள்ள அருமையான வாய்ப்பு ஒன்று எனக்கு வந்துள்ளது.

சிவனோ,திருமாலோ,பிரமனோ குரங்கு வடிவம் கொண்டு வந்திருந்தாலும் அழித்துவிட்டு வருகிறேன்.

குரங்கைத் தப்பிக்க விட்டுவிட்டால் எனக்கு தாங்கள் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற வேறுவழியின்றி ராவணனும் அட்சகுமரனின் வேண்டுகோளை ஏற்றான்.

அட்ச குமரனுக்கும்,அநுமனுக்கும் கடும்போர் நடைபெறுகிறது.

இருவரிடையேயும் விற்போர்,வாள் போர் முழுவீச்சில் நடைபெறுகிறது.
அட்ச குமரன் தன் உடைவாளை எடுத்து அநுமனின் தோளில் குத்தினான்.
தம் கரத்தில் உள்ள ஆயுதங்கள் முழுவதும் நீங்கிய நிலையில் அநுமனைக் கட்டிப்பிடிக்க முயன்றான். அதற்குள் அநுமன் தம் நீண்ட நெடிய வாலால் அட்ச குமரனைக் கட்டிவிட்டான்.

போரின் நிறைவில் அட்சகுமரன் வீரமரணம் அடைந்துவிட்டான். 

அக்ஷய குமரன் என்ற வட சொல்லுக்கு அழிவில்லாதவன் என்று பொருள்.அழிவில்லாத என்ற பொருள் உள்ள இப் பிள்ளை தான் தந்தையின் பொருட்டு முதலில் அழிந்த பிள்ளை என நினைக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.

தந்தைக்கு பின்னால் இறப்பது தான் உலக இயற்கை.
ஆனால் தான் செய்யாத தவறுக்காக தந்தைக்கு முன்னமேயே உயிரைக்கொடுத்து மறைந்தான்.
இம் மரணம் தான் கற்போர் நெஞ்சில் துயரத்தை உறையவைக்கிறது.

ராம,ராவணப்போரில் ராவணன் என்ற வேர் மடிந்தே ஆக வேண்டும்.ஆனால் அட்ச குமரன் போன்ற விழுதுகள் சாய்ந்ததை தான் உள்ளம் ஏற்க தயங்குகிறது.

*கம்பர் புகழ் வாழ்க*

கவிமலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன்.✍ .

No comments:

Post a Comment