🙏 *கம்பர் கவி மலர்* 🙏 12-12-19
ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !
இவ் வார கவிமலரில் *அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள்* *"மயிலியற் குயின்மொழி"மின்னெனத் திகழும் மெய்யாள்" "இசையினும் இனிய சொல்லாள்"* என்று கம்பனால் புகழப்பட்ட *தாரை* யைப் பற்றி பகிர்ந்து மகிழ்வோம்.
இராம காதையில் குறைந்த பாடல்களில் தாரை பேசப்பட்டாலும், நிறைந்த அளவில் படிப்போர் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறார்.
கம்பன் மூன்று காட்சிகளாக தாரையை நம் மனத் திரையில் உலவ விடுகிறார்.
சுக்ரீவன் தன் உள்ளம் முழுவதையும் வாலி என்ற அச்சத்தால் நிரப்பியவன்.t
வாலியின் வல்லமை முழுவதையும் அறிந்தவன்.
அதனை அனுபவித்தவனும் கூட.
வாலியின் தாக்குதலுக்கு அஞ்சி சுக்ரீவன் ஒளிந்து இருந்தான்.
திடீரென்று ஒரு நாள் வாலியைப் போருக்கு அழைக்கிறான்.
சுக்ரீவனின் போர்க்குரலைக் கேட்ட அளவில் வாலி மிக்க சினம் கொண்டு போருக்கு புறப்பட்டான்.
வாலியின் மனைவி தாரை சூழ்நிலையை புரிந்து கொள்கிறாள்.
எம் தலைவரே! செல்வதை தடுப்பதாக நினைக்க வேண்டாம்.
சுக்ரீவனுக்குப் பின்னே வலிமையான சக்தி ஒன்று இருக்கிறது.
அதனால் தான் போருக்கு உம்மை அழைக்கிறார் என்கிறாள்.
நாட்டின் அன்றாட நடப்புகளை தன் விரல் நுனியில் வைத்திருந்தாள்.
தன் அரசியல் கணிப்புத் திறமையால் ரிஷ்யமுக மலையில் இராம,இலக்குவர்கள் வருகையை புரிந்து வைத்திருந்தாள்.
அது மட்டுமல்லாமல் தசரத புத்திரர்கள் பற்றிய முழு செய்திகளையும் தம் யூகத்தால் சேகரித்து விட்டாள். மேலும்
அவர்கள் உம்முடைய உயிரை கொள்வதற்கு (கொல்லுவதற்கு) வந்துள்ளார்கள் என்பதனையும் அன்புடையவர்கள் கூற அறிந்தேன் என்கிறாள்.
*இன்னுயிர் நட்பமைந்து இராமன்* *என்பவன்,உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான் எனத்*
*துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள்*
தாரையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான் வாலி.
அடுத்த காட்சி
போரில் வீழ்ந்து கிடக்கிறான் வாலி.
சற்று நேரத்தில் மரணத்தை தழுவிவிடலாம்.
தலை தெறிக்க,தலை விரிகோலமாய் ஓடி வந்து வாலியின் மார்பில் விழுந்து புலம்புகிறாள்;கதறுகிறாள்;துடிக்கிறாள் தாரை.
நின் தோளில் நித்தம் தங்குவேன்.ஆதலால் இது வரை துன்பத்தை கண்டதில்லை;
நான் புலம்புகிறேன்! என் புலம்பலைப் பார்த்து நீர் ஏதும் சொல்லவில்லையே; என் குற்றம் யாது தலைவனே!
என் உயிர் உன் உயிர் என எப்பொழுதும் சொல்லி வந்தாயே! அது பொய்யோ!
உன் உயிர் இன்று துன்பம் அடைய எங்கு சென்றாயோ! என்ற தாரையின் புலம்பல்கள் நம் நெஞ்சை நெகிழ்வித்து கரைத்துவிடுகின்றன.
அடுத்த காட்சி
சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் மன்னன் ஆகி விட்டான்.மது அருந்தி தன்னை மறந்தான்:ராமனுக்கு கொடுத்த வாக்குறுதியையும் மறந்தான்.
காலம் கடந்தது.
இராமன் தன் இளவல் இலட்சுமணனைப் பார்த்து சுக்ரீவனிடம் சென்று அவன் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி வா என்று அனுப்புகிறான்.
இலட்சுமணனோ கோபக் கனலாகி கொதித்து சீறிட்டு வருகிறான்.
அவனை சாந்தப்படுத்த வழி தெரியாமல் அனுமனும்,அங்கதனும் தவிக்கின்றனர்
பின்னர் தாரையிடம் சென்று, தாயே! இந் நெருக்கடியை தாங்கள்தான் தீர்த்து அருள வேண்டும் என முறையிடுகின்றனர்.
தாரையோ தனக்கு *இழைக்கப் பட்ட தீமையை* சகித்துக்கொண்டு
இலக்குவனை அமைதி படுத்த முனைகின்றாள்.
இலக்குவரே! சினம் தணிக! சிறியோர் செய்யும் தீவினையை அறிவிற் சிறந்த தாங்கள் அல்லவா பொறுத்தருள வேண்டும்.
சுக்ரீவன் மது மயக்கத்தில் திளைத்திருப்பதை *மறைத்து* அவன் வானரச் சேனைகளை ஒன்று திரட்டுவதற்கு அனைத்து இடங்களுக்கும் தூது அனுப்பியிருக்கிறான்.
அவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் எனக் கூறுகிறாள்.மேலும்
அண்ணனை அழித்து தமக்கு அரச பதவியை அளித்த செயலை மறப்பாரா!
உங்களுக்கு செய்ய வேண்டிய பதில் உதவியை எம் மைத்துனர் ஒருபோதும் மறக்க மாட்டார் எனவும் கூறுகிறாள்.
ஆகவே தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.விரைவில் படைகளை ஒன்றிணைத்து அனுப்புகிறோம் என்கிறாள்.
தாரையின் உரை பெண்மையின் மேன்மையை பறைசாற்றி விடுகிறது.
மன்னனுக்கு வரும் முன் சொல்லும் மதியூகியாக விளங்குகிறாள்.
வாலியின் இன் உயிர்த் துணைவியாக இருந்தும் அவனது அரசாட்சிக்கு துணையாக இருந்தும் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள்.
தம் துன்பத்தை மறைத்து சுக்ரீவன் சார்பாக இலக்குவனிடம் பேசும் போது தியாகச் சுடராய் ஒளிர் விடுகிறாள்.
பெண்மை போற்றிய கம்பனோடு நாமும் இணைந்து மகிழ்வோம்!!
*கம்பர் புகழ் வாழ்க*
கவி மலரின் மணம் தொடரும்.
தே.இரா.வீரராகவன். ✍
No comments:
Post a Comment