Wednesday, January 22, 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ  ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!

போர்க்களத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனுடன் விபீஷணனும் நிற்கிறான்.
களத்தில் வீரத்துடன் எதிரே நிற்பவனைப் பார்த்த ராமன் விபீஷணா! இவன் யார் எனக் கேட்கிறான்.

இவர் நீதிகள் முழுதும் அறிந்த கும்பகர்ணன்.எனக்கு மூத்தவர்.  ராவணனுக்கு இளையவர்.தன் தமையனுக்கு புத்திமதிகள் பல கூறியும் அவர் கேட்காமையால் தமையனுக்காக போர் புரிய வந்துள்ளார்.

இதனைக் கேட்ட ராமனும் கொடியவனுக்காக உன் தமையன் கும்பகர்ணன் ஏன் உயிரை விட வேண்டும்.அவரை இங்கே அழைத்து வருக எனச் சொல்கிறான்.

இதனைக் கேட்ட விபீஷணனும் மகிழ்ச்சியுடன் கும்பகர்ணனிடம் சென்று வணங்கினான்.

கும்பகர்ணன், இராமனுடன் இருக்க மனமில்லாது நம்மிடமே வந்துவிட்டான் விபீஷணன் என நினைத்து
அவனை மார்புடன் இறுகத் தழுவிக்கொண்டு தம்பி!, "நீ ராகவனிடம் சரண் அடைந்துவிட்டாய்!இம்மையிலும்,மறுமையிலும் நன்மை பெற்றுவிட்டாய் என்றல்லவோ நினைத்தேன். அப்படி இருக்க காலன் வாயில் நுழைய இருக்கும் என்னை நோக்கி ஏன் வந்தாய்?
             மேலும்

நாங்கள் மடிந்த பிறகு நீ இருந்தால்தானே எங்களுக்கு எள்ளும்,நீரும் இறைத்து பிதுர்க் கடனை ஆற்ற முடியும்.

ஆகவே நீ ராமன் பக்கம் சென்றுவிடு என கும்பகர்ணன் மன்றாடுகிறான்.

இதனைக் கேட்ட விபீஷணன், அண்ணா!  நான் இராமனைப் பிரிந்து வந்துவிடவில்லை.
நீங்கள் ஞானத்தில் சிறந்தவராகவும்,நீதியில் வல்லவராகவும் இருப்பதால் உம்முடைய மரணத்தை தடுத்து, ஸ்ரீ ராமனின் பக்கம் சேர்த்து அழியா பேரின்பம் பெற அவனுடன் சேர்த்து விடலாம் என வந்தேன்.

தாங்கள் சம்மதித்தால் என்னைக் காப்பது போலவே தங்களையும் காத்து அருளுவார்.
அவரால் எனக்களிக்கப் பட்ட இலங்கை அரசை நான் உம்முடைய திருவடிகளில் அளித்துவிட்டு, ஏவல் செய்ய காத்து இருக்கிறேன் என சொல்லுகிறான்.

இதனைக் கேட்ட கும்பகர்ணன், பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே 
என் கண்ணின் மணியே! விபீஷணா!

என்னை நீண்டகாலம் எத் துன்பத்தையும் கொடுக்காமல் சுகமாக வளர்த்தான் ராவணன்.
அவனே தன் கையாலேயே நெற்றிக்குத் திலகமிட்டு போர்க்கோலம் அணிவித்து போருக்குச் சென்று வா என அனுப்பி இருக்கிறான்.

அந்த அண்ணனுக்காக போருக்குச் செல்வேனா! அதை விட்டு *நீர்க்கோல வாழ்வை நச்சி*(நீரால் வரையப்பட்ட கோலத்தைப் போன்ற நிலையில்லாத வாழ்வை விரும்பி) எதிர் அணியில் சேருவேனா!

இதுவரை உயிருக்கும், உடலுக்கும் உரமூட்டிய அவனுக்காக செஞ்சோற்றுக் கடனை தீர்ப்பது தானே நீதி! நியதியும் கூட

நீரில் எழுதப்பட்ட அல்லது நீரால் எழுதப்பட்ட கோலம் போன்ற நிலையில்லாத செல்வ வாழ்வை விரும்பி தமையனுக்கு உயிரைக் கொடுப்பதில் இருந்து  பின்வாங்க மாட்டேன் என்று கும்பன் கூறுவது ஞானத்தால் பக்குவப்பட்டவன் அவன் என்பது தெளிவாக விளங்குகிறது.அது மட்டுமில்லாமல் தியாகத்தின் திருவுருவாய் காட்சியளித்து படிப்போரை கலங்க அடித்து விடுகிறான்.

தம்பீ, என் துன்பத்தைக் களைய வேண்டும் என நீ நினைத்தால் கார்முகில் வண்ணனாகிய இராமனை விரைவில் சென்று அடைவாய் என உரைக்கிறான்.

*நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்* 
*போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர்க்கொடாது அங்குப் போகேன்*
*தார்க் கோல மேனி மைந்த: என் துயர் தவிர்தியாகில்*
*கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் என்றான்"*

விபீஷணனுக்கும்,கும்பகர்ணனுக்கும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பன் ஆளும் நீர்க்கோல வாழ்வை விரும்பி என்னும் தொடர் மூலம் நம்  உள்ளத்தை  கொள்ளை கொண்டு விடுகிறான்.

நீ இராமனைத் தான் சென்று அடைய வேண்டும் என்ற கும்பனின் உறுதி சகோதர பாசத்தின் உச்சத்தையே தொட்டுவிடுகிறது.நம் நெஞ்சையும் நெகிழ வைத்து விடுகிறது.

*கம்பன் புகழ் வாழ்க*

   கம்பன் கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன் ✍
16 - 01- 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ  ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

வாலிக்கும்,சுக்ரீவனுக்கும் மற்போர் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.ஒரு கட்டத்தில் சுக்ரீவனை வாலி மிக தீவிரமாக தாக்கினான்.

சுக்ரிவன் என்ன செய்வதென்று தெரியாமல் தீனமாக ராமனை நோக்கினான்.

அந்த நேரத்தில் ராமன் தமது கோதண்டத்தில் அம்பினைத் தொடுத்து வாலியின் மார்பில் விட்டான். அக் கணத்தில்
வாலி தனது கைகளில் பற்றியிருந்த சுக்ரீவனை நழுவவிட்டான். தன்

மார்பில் பாய்ந்த அம்பினை இறுகப் பிடித்துக்கொண்டான்.

கலங்கி,களத்தில் சாய்ந்தான் வாலி.
நமக்குத் தெரியாமல் இந்த அம்பினை எய்தவன் யாராக இருக்கக் கூடும் என யோசனையில் ஆழ்கிறான்

அம்பினை ஆவேசத்தில் முறித்தெறிய முயலுகிறான்.
முறிக்க முடியவில்லை.

அம்பின் அடிப்புறத்தைப் பார்க்கிறான்.
ஆடிப்போய் விடுகிறான்..அவன் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறான்.  ஆம்.
முற்றிலும் எதிர்பாராத ஏற்பட்ட நிகழ்வு .அம்பில்
ராமன் என்னும் பெயர் பொறித்திருப்பதை கண்டான்.
கவியரசர் கூறுவதைப் பார்ப்போம்.
*மும்மைசால் உலகுக்(கு) எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்* *தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே* *இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்* *செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்.*
(பிறகு வாலியின் கேள்விகள்  -இராமனின் உரைகள் பல பாடல்களில் வருகின்றன.இதனை பிறகு பார்ப்போம்.)

இராமன் என்னும் நாமம் தன்னை கண்களால் தெரிந்து கண்டான்  என்று சொல்லாமல் கண்களில் தெரியக் கண்டான் என்று கம்பன் சொல்வதற்கு நுட்பமான பொருள் உண்டு.

தெரிந்து கண்டான் என்பது முயற்சி செய்து தேடிக் காணுதல்.

தெரியக் கண்டான் என்பது முயற்சி எதுவும் இல்லாமல் பரம்பொருளே தன்னை நாடி வந்து (அருளுவது)காண்பது.

ஆதி நாயகனாம் இராமனை அறிந்து கொள்ள வாலி முயலவில்லை.
தன் பெயர் பொறிக்கப்பட்ட அம்பை ராமன்  அனுப்பி தன்னைக்காட்ட 
வாலி கண்டான்.

மேலிருந்து கீழே இறங்கி கீழே இருந்த வாலியை மேலே(பரம பதத்திற்கு) அழைத்து செல்ல முயல்வதை சொல்லும் சொல்தான் தெரியக் கண்டான். 

கண்களில் தெரியக் கண்டான் என்ற கவிச் சக்கரவர்த்தியின் பொருள் ஆழம் மிக்க வரிகள் நினைத்து மகிழத் தக்கது.

*சிறியன சிந்தியாதான்* ஆகிய வாலிக்கு மோட்சம் அருளுவது தான் ஸ்ரீ ராமபிரானின் குறிக்கோள்.
வாலி வதைப் படலம் என்பதை வாலி மோட்சப் படலம் என்றாலும் பொருத்தமே.

*கம்பர் புகழ் வாழ்க!*

கம்பர் கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். ✍
23-01-2020

Tuesday, January 14, 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏      12-12-19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்! 

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கவிமலரில் *அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள்* *"மயிலியற் குயின்மொழி"மின்னெனத் திகழும் மெய்யாள்" "இசையினும் இனிய சொல்லாள்"* என்று கம்பனால் புகழப்பட்ட *தாரை* யைப் பற்றி பகிர்ந்து மகிழ்வோம்.

இராம காதையில் குறைந்த பாடல்களில் தாரை பேசப்பட்டாலும், நிறைந்த அளவில் படிப்போர் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறார்.

கம்பன் மூன்று காட்சிகளாக தாரையை நம் மனத் திரையில் உலவ விடுகிறார்.

சுக்ரீவன் தன் உள்ளம் முழுவதையும் வாலி என்ற  அச்சத்தால் நிரப்பியவன்.t
வாலியின் வல்லமை முழுவதையும் அறிந்தவன்.
அதனை அனுபவித்தவனும் கூட.

வாலியின் தாக்குதலுக்கு அஞ்சி சுக்ரீவன் ஒளிந்து இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் வாலியைப் போருக்கு அழைக்கிறான்.
சுக்ரீவனின் போர்க்குரலைக் கேட்ட அளவில் வாலி மிக்க சினம் கொண்டு போருக்கு புறப்பட்டான்.

வாலியின் மனைவி தாரை சூழ்நிலையை புரிந்து கொள்கிறாள்.
எம் தலைவரே!  செல்வதை தடுப்பதாக நினைக்க வேண்டாம்.
சுக்ரீவனுக்குப் பின்னே வலிமையான சக்தி ஒன்று இருக்கிறது.
அதனால் தான் போருக்கு உம்மை அழைக்கிறார் என்கிறாள்.

நாட்டின் அன்றாட நடப்புகளை தன் விரல் நுனியில் வைத்திருந்தாள்.
தன் அரசியல் கணிப்புத் திறமையால் ரிஷ்யமுக மலையில் இராம,இலக்குவர்கள் வருகையை புரிந்து வைத்திருந்தாள்.

அது மட்டுமல்லாமல் தசரத புத்திரர்கள் பற்றிய முழு செய்திகளையும் தம் யூகத்தால் சேகரித்து விட்டாள். மேலும்
அவர்கள் உம்முடைய உயிரை கொள்வதற்கு (கொல்லுவதற்கு) வந்துள்ளார்கள் என்பதனையும் அன்புடையவர்கள் கூற அறிந்தேன் என்கிறாள்.

*இன்னுயிர் நட்பமைந்து இராமன்* *என்பவன்,உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான் எனத்*
*துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள்* 

தாரையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான் வாலி.
  
       அடுத்த காட்சி

போரில் வீழ்ந்து கிடக்கிறான் வாலி.
சற்று நேரத்தில் மரணத்தை தழுவிவிடலாம்.

தலை தெறிக்க,தலை விரிகோலமாய்  ஓடி வந்து வாலியின் மார்பில் விழுந்து புலம்புகிறாள்;கதறுகிறாள்;துடிக்கிறாள் தாரை.

நின் தோளில் நித்தம் தங்குவேன்.ஆதலால் இது வரை துன்பத்தை கண்டதில்லை;
நான் புலம்புகிறேன்! என் புலம்பலைப் பார்த்து நீர் ஏதும் சொல்லவில்லையே; என் குற்றம் யாது தலைவனே!

என் உயிர் உன் உயிர் என எப்பொழுதும் சொல்லி வந்தாயே! அது பொய்யோ!
உன் உயிர் இன்று துன்பம் அடைய எங்கு சென்றாயோ! என்ற தாரையின் புலம்பல்கள் நம் நெஞ்சை நெகிழ்வித்து கரைத்துவிடுகின்றன.

        அடுத்த காட்சி

சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் மன்னன் ஆகி விட்டான்.மது அருந்தி தன்னை மறந்தான்:ராமனுக்கு கொடுத்த வாக்குறுதியையும் மறந்தான்.
காலம் கடந்தது.

இராமன் தன் இளவல் இலட்சுமணனைப் பார்த்து சுக்ரீவனிடம் சென்று  அவன் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி வா என்று அனுப்புகிறான்.

இலட்சுமணனோ கோபக் கனலாகி கொதித்து சீறிட்டு வருகிறான்.
அவனை சாந்தப்படுத்த வழி தெரியாமல் அனுமனும்,அங்கதனும் தவிக்கின்றனர்

பின்னர் தாரையிடம் சென்று, தாயே! இந் நெருக்கடியை தாங்கள்தான் தீர்த்து அருள வேண்டும் என முறையிடுகின்றனர்.

தாரையோ தனக்கு *இழைக்கப் பட்ட தீமையை* சகித்துக்கொண்டு
இலக்குவனை அமைதி படுத்த முனைகின்றாள்.

இலக்குவரே! சினம் தணிக! சிறியோர் செய்யும் தீவினையை அறிவிற் சிறந்த தாங்கள் அல்லவா பொறுத்தருள வேண்டும்.

சுக்ரீவன் மது மயக்கத்தில் திளைத்திருப்பதை *மறைத்து* அவன் வானரச் சேனைகளை ஒன்று திரட்டுவதற்கு அனைத்து இடங்களுக்கும் தூது அனுப்பியிருக்கிறான்.
அவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் எனக் கூறுகிறாள்.மேலும்

அண்ணனை அழித்து தமக்கு  அரச பதவியை அளித்த செயலை மறப்பாரா!
உங்களுக்கு செய்ய வேண்டிய பதில் உதவியை எம் மைத்துனர் ஒருபோதும் மறக்க மாட்டார் எனவும் கூறுகிறாள்.

ஆகவே தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.விரைவில் படைகளை ஒன்றிணைத்து அனுப்புகிறோம் என்கிறாள்.

தாரையின் உரை பெண்மையின் மேன்மையை பறைசாற்றி விடுகிறது.

மன்னனுக்கு வரும் முன் சொல்லும் மதியூகியாக விளங்குகிறாள்.

வாலியின்  இன் உயிர்த் துணைவியாக இருந்தும் அவனது அரசாட்சிக்கு துணையாக இருந்தும்  நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள்.

தம் துன்பத்தை மறைத்து சுக்ரீவன் சார்பாக இலக்குவனிடம் பேசும் போது தியாகச் சுடராய் ஒளிர் விடுகிறாள்.

பெண்மை போற்றிய கம்பனோடு நாமும் இணைந்து மகிழ்வோம்!!

*கம்பர் புகழ் வாழ்க*

கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். ✍