🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!
போர்க்களத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனுடன் விபீஷணனும் நிற்கிறான்.
களத்தில் வீரத்துடன் எதிரே நிற்பவனைப் பார்த்த ராமன் விபீஷணா! இவன் யார் எனக் கேட்கிறான்.
இவர் நீதிகள் முழுதும் அறிந்த கும்பகர்ணன்.எனக்கு மூத்தவர். ராவணனுக்கு இளையவர்.தன் தமையனுக்கு புத்திமதிகள் பல கூறியும் அவர் கேட்காமையால் தமையனுக்காக போர் புரிய வந்துள்ளார்.
இதனைக் கேட்ட ராமனும் கொடியவனுக்காக உன் தமையன் கும்பகர்ணன் ஏன் உயிரை விட வேண்டும்.அவரை இங்கே அழைத்து வருக எனச் சொல்கிறான்.
இதனைக் கேட்ட விபீஷணனும் மகிழ்ச்சியுடன் கும்பகர்ணனிடம் சென்று வணங்கினான்.
கும்பகர்ணன், இராமனுடன் இருக்க மனமில்லாது நம்மிடமே வந்துவிட்டான் விபீஷணன் என நினைத்து
அவனை மார்புடன் இறுகத் தழுவிக்கொண்டு தம்பி!, "நீ ராகவனிடம் சரண் அடைந்துவிட்டாய்!இம்மையிலும்,மறுமையிலும் நன்மை பெற்றுவிட்டாய் என்றல்லவோ நினைத்தேன். அப்படி இருக்க காலன் வாயில் நுழைய இருக்கும் என்னை நோக்கி ஏன் வந்தாய்?
மேலும்
நாங்கள் மடிந்த பிறகு நீ இருந்தால்தானே எங்களுக்கு எள்ளும்,நீரும் இறைத்து பிதுர்க் கடனை ஆற்ற முடியும்.
ஆகவே நீ ராமன் பக்கம் சென்றுவிடு என கும்பகர்ணன் மன்றாடுகிறான்.
இதனைக் கேட்ட விபீஷணன், அண்ணா! நான் இராமனைப் பிரிந்து வந்துவிடவில்லை.
நீங்கள் ஞானத்தில் சிறந்தவராகவும்,நீதியில் வல்லவராகவும் இருப்பதால் உம்முடைய மரணத்தை தடுத்து, ஸ்ரீ ராமனின் பக்கம் சேர்த்து அழியா பேரின்பம் பெற அவனுடன் சேர்த்து விடலாம் என வந்தேன்.
தாங்கள் சம்மதித்தால் என்னைக் காப்பது போலவே தங்களையும் காத்து அருளுவார்.
அவரால் எனக்களிக்கப் பட்ட இலங்கை அரசை நான் உம்முடைய திருவடிகளில் அளித்துவிட்டு, ஏவல் செய்ய காத்து இருக்கிறேன் என சொல்லுகிறான்.
இதனைக் கேட்ட கும்பகர்ணன், பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
என் கண்ணின் மணியே! விபீஷணா!
என்னை நீண்டகாலம் எத் துன்பத்தையும் கொடுக்காமல் சுகமாக வளர்த்தான் ராவணன்.
அவனே தன் கையாலேயே நெற்றிக்குத் திலகமிட்டு போர்க்கோலம் அணிவித்து போருக்குச் சென்று வா என அனுப்பி இருக்கிறான்.
அந்த அண்ணனுக்காக போருக்குச் செல்வேனா! அதை விட்டு *நீர்க்கோல வாழ்வை நச்சி*(நீரால் வரையப்பட்ட கோலத்தைப் போன்ற நிலையில்லாத வாழ்வை விரும்பி) எதிர் அணியில் சேருவேனா!
இதுவரை உயிருக்கும், உடலுக்கும் உரமூட்டிய அவனுக்காக செஞ்சோற்றுக் கடனை தீர்ப்பது தானே நீதி! நியதியும் கூட
நீரில் எழுதப்பட்ட அல்லது நீரால் எழுதப்பட்ட கோலம் போன்ற நிலையில்லாத செல்வ வாழ்வை விரும்பி தமையனுக்கு உயிரைக் கொடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கும்பன் கூறுவது ஞானத்தால் பக்குவப்பட்டவன் அவன் என்பது தெளிவாக விளங்குகிறது.அது மட்டுமில்லாமல் தியாகத்தின் திருவுருவாய் காட்சியளித்து படிப்போரை கலங்க அடித்து விடுகிறான்.
தம்பீ, என் துன்பத்தைக் களைய வேண்டும் என நீ நினைத்தால் கார்முகில் வண்ணனாகிய இராமனை விரைவில் சென்று அடைவாய் என உரைக்கிறான்.
*நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்*
*போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர்க்கொடாது அங்குப் போகேன்*
*தார்க் கோல மேனி மைந்த: என் துயர் தவிர்தியாகில்*
*கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் என்றான்"*
விபீஷணனுக்கும்,கும்பகர்ணனுக்கும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பன் ஆளும் நீர்க்கோல வாழ்வை விரும்பி என்னும் தொடர் மூலம் நம் உள்ளத்தை கொள்ளை கொண்டு விடுகிறான்.
நீ இராமனைத் தான் சென்று அடைய வேண்டும் என்ற கும்பனின் உறுதி சகோதர பாசத்தின் உச்சத்தையே தொட்டுவிடுகிறது.நம் நெஞ்சையும் நெகிழ வைத்து விடுகிறது.
*கம்பன் புகழ் வாழ்க*
கம்பன் கவி மலரின் மணம் தொடரும்.
தே.இரா.வீரராகவன் ✍
16 - 01- 2020