Tuesday, November 26, 2019

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏         28-11-19



ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!

இவ் வார கவிமலரில் திரிசடை என்ற பாத்திரப்படைப்பின் சிறப்பை  படித்து மகிழ்வோம்.

சுந்தர காண்டத்தின் காட்சிப்படலத்தில் திரிசடை கம்பனால் அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

அரக்கர் குலத்தில் அவதரித்த அறச்செம்மல்!
சேற்றில் விளைந்த செந்தாமரை!  ஆம்
           விபீஷணன்

விபீஷணனின் திருமகள்தான் திரிசடை.

முழுமையாக அறியப்படாதவள் ஆகவும்,முக்கியப் பாத்திரமாகவும் விளங்கி சிறப்பு சேர்க்கிறாள்.

அன்னை ஜானகியால் தாயே என்றும்,உற்ற தோழி என்றும் விளிக்கப்பட்டவள் திரிசடை.

சீதா தனது மாமியர்களையோ,வேறு யாரையுமே தாய் என அழைக்காமல் இவளை மட்டும் தாய் என அழைத்த பெருமைக்கு உரியவள்.
அதனால்தான் கவியரசரும் *ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்.* என்கிறார்

சீதாப் பிராட்டி அசோகவனத்தில் கணவனை காண முடியாத சோகத்தில் இருக்கும்பொழுது சுகமான தேறுதல் வார்த்தைகளை அவ்வப்போது சொல்லக்கூடிய தாயாகவும், தோழியாகவும் விளங்குகிறாள்.

முன்னொரு காலத்தில் விசுவாமித்ரரும்,எனது தலைவரும்,இளையவரும் மிதிலை வந்த நேரத்தில் எனது இடக்கண் துடித்தது.பிறகு பூமி முழுவதையும் இழந்து தம்பியுடன் காடு புக நேர்ந்த போது வலக்கண் துடித்தது என்கிறாள்.

தற்காலத்தில் நடந்த நிமித்தங்களை மட்டும் கூறாமல் கடந்த காலத்தில் நடந்த நிமித்தங்களையும் குழந்தைபோல் சீதா திரிசடையுடன் பகிர்ந்தாள் என்னும்போது தோழமையின் நெருக்கம் புரிகிறது.

பெண்களுக்கு இடக்கண் துடிப்பதும்,ஆண்களுக்கு வலம் துடிப்பதும் நன்மைக்கான அறிகுறிகள்.

ஒரு சமயம் திரிசடை தான் இரவு கண்ட கனவைப் பற்றி சீதாதேவியிடம் சொல்கிறாள்.

அழகிய திருமகளே! தீட்சண்யமான உன் முகத்தில் பிரகாசமான ஒளி ஒன்று தெரிகிறது.

உன் காதுகளில்  பொன்வண்டு ஒன்று ஊதிச் செல்லுகிறது.

ஆகையால் இனிய நற்செய்தி ஒன்றை விரைவில் கேட்கப்போகிறாய்!
*செவியில்,மெல்லென,பொன் நிறத் தும்பி வந்து,ஊதிப்போயதால் என்பது கம்பன் வரிகள்.

திரிசடை இன்னும் சொல்கிறாள்.
சீதா, நீ நேற்று இரவு உறங்கவே இல்லை.ஆனால் நான் உறங்கினேன்.
உறக்கத்தில் நான் கனவில் கண்டதைச் சொல்லுகிறேன்.கேள்!

ராவணன் தன் உடல் முழுவதையும் எண்ணெய் பூசிக்கொண்டும்,சிவந்த ஆடை அணிந்து கொண்டும் கழுதையும்,பேயும் ஓட்டிக்கொண்டு செல்கிற தேரில் ஏறி சுற்றம் சூழ தென்திசைக்குச் சென்றான். அவள் மனைவி மண்டோதரியின் கூந்தலோ தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
     
       மேலும் கேள்!

அடர்ந்த ஓர் காடு.
அக் காடு முழுவதும் யானைகளின் கூட்டம். அந்த இடத்திற்கு இரு சிங்கங்கள் தலைமையில் ஒரு புலிக் கூட்டமே வந்தது.
அக் கூட்டங்கள் யானைக் கூட்டங்களை அழித்து ஒழித்தது.
யானைகளிடம் இருந்த *அழகிய மயில் ஒன்று புறப்பட்டு சிங்கங்களிடம் போய்ச் சேர்ந்தது என்றாள்.
          மேலும்
    ஆயிரம் விளக்கொளியின் பிரகாசத்தை உடைய ஓர் விளக்கை ஏந்திக்கொண்டு திருமகள் என் பெரியப்பாவின் வீட்டில் இருந்து என் தந்தையின் இல்லத்திற்கு வருவதையும் கனவில் கண்டேன் என்றும் உரைக்கிறாள்.

இலங்கையின் அரசப்பதவி தன் தந்தையை நோக்கி வர இருக்கிறது என்பதையும் கனவின் பயனாக சொல்லாமல் சொல்கிறாள் திரிசடை.

சுந்தர காண்டத்தில் திரிசடை பற்றிய செய்தி இத்துடன் நிறைவடைகிறது.
யுத்த காண்டத்திலும் தொடர்கிறது. 

சீதாப் பிராட்டியார் மனத் தளர்ச்சி அடைந்த நேரங்களில் சோர்வுகளை நீக்கி,மனத் தெம்பினை ஊட்டி உயிர் வளர்த்த அருமையான பாத்திரப் படைப்பு தான் *திரிசடை.

நம் கம்பன் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை: கனவுப் பலன்களை கணிப்பதிலும் வல்லவனாக, பல கலைகளிலும் தேர்ந்தவனாக இருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறோம்.

கம்பர் புகழ் வாழ்க!

கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். 


No comments:

Post a Comment