Thursday, November 7, 2019

தமிழ் இலக்கியம்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் !!

இவ் வார மலரில் கம்பரின் அழகிய சொல்லோவியம் ஒன்றினை படித்து மகிழ்வோம்.

இராவணனை அழித்து சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறான் இராமன்.
வரக்கூடிய வழியில் பரத்வாஜ முனிவரை கண்டு வணங்கி அவருடைய விருந்தோம்பலை ஏற்று மகிழ்கிறான்.

பரத்வாஜ மாமுனிவரும் இராமனை பலவாறாக புகழ்கிறார். மேலும் இராமா! நீ விரும்பியது எதுவானாலும் உனக்கு வரமாக கொடுத்துவிட்டேன்.இப்பொழுது சொல்! உனக்கு என்ன வேண்டும் என கேட்க ராமனும் குரங்குக் கூட்டங்கள் துன்பமின்றி சென்ற இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அருள வேண்டும் என்கிறான்.
*கவிக்குலம் கவ்வை இன்றாகி வென்றி பெற்று வாழ்க!* என்பது கம்பனின் வரிகள்.

மேலும் குரங்குகள் செல்லும் இடங்களில் எல்லாம் காயும்,கனிகளும்,செழுந்தேனும் மிக்கு விளங்க தாங்கள் அருளல் வேண்டும் எனவும் கேட்கிறான்.

முனிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளிக்க ராமபிரானும் மகிழ்ச்சி அடைகிறார்.நன்றியின் உருவகமாகவே ராமன் மாறி விடுவதை பார்த்து வியந்து நிற்கிறோம்.

பிறகு ஆசிரமத்தில் இருந்து கொண்டே அநுமனைப் பார்த்து, மாருதி! நீ இன்றைக்கே விரைந்து அயோத்தி செல்! எனக்கு ஒரு தீமையும் இல்லை என்பதை பரதனுக்கு சொல்! அவன் நெருப்பில் புகுவதை தடுத்து நிறுத்தி விடு என ராமன் உரைக்க, இராமன் அளித்த கணையாழியை கையில் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான் அநுமன்.

அநுமன் விரைந்துசென்று அயோத்திக்கு அருகில் தவக் கோலத்தில் காட்சி  அளிக்கும் பரதனைப் பார்த்து திடுக்கடைந்து வியந்து நிற்கிறான்.

மரவுரி தரித்த கோலத்தில் சடைமுடி தாங்கி அழுக்குக் கோலத்தில் இருக்கிறான் பரதன்.

ராமனை பல்லாண்டுகள் பார்க்காததால் கண்கள் உள்ளடங்கி முகம் மிக வாடி இருந்தது.

பக்திப்பெருக்கில் தியானக் கோலத்தில் இருக்க, இரு கண்களிலும் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அண்ணன் வரக்கூடிய தென்திசையையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

அவன் குறித்த நேரத்தில் வராமையால் மயக்கம் அடைந்து கீழே வீழ்கிறான்.

இராமனுக்கு துன்பம் ஏதாகிலும் நேர்ந்துவிட்டதோ என கலங்குகிறான்.

என்னை அரசின் மேல் ஆசை கொண்டேன் என நினைத்து வாராமல் இருந்து விட்டானோ தமையன் என்றெல்லாம் நினைத்து வேதனையில் புழுவாகத் துடிக்கிறான்.

சத்ருக்னனை அழைத்து தம்பி!
சொன்ன நாளில் அண்ணன் வரவில்லை.
யான் தீயில் வீழ்ந்து உயிரை விடுவேன்.
நீ என் சொல்லைத் தட்டாமல் அயோத்தியின் அரசனாக பொறுப்பேற்க வேண்டும் என்கிறான்.

இதைக் கேட்டவுடன் சத்ருக்னன் திடுக்கிட்டு,உடல் நடுக்கம் அடைகிறான். தன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு
அண்ணா! என்னை என்னவென்று நினைத்துக்கொண்டீர்கள்!

நாட்டை விட்டு காட்டை ஆள ராமன் சென்றான்.
அவனைக் காப்பாற்ற அவன்பின்னே லட்சுமணன் என்னும் தம்பி சென்றான்.
காட்டுக்குள் போனவன் குறிப்பிட்ட நாளில் வரவில்லையே என நினைத்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறான் பரதன் என்ற இன்னொரு தம்பி

ஆனால் இவர்களுடன் பிறந்த நான்மட்டும் அரசை ஆள்வேனாம்.
மிக நன்றாக இருக்கிறது.

அண்ணா! ராமன் காட்டுக்குச் செல்ல பரதன் நாட்டை ஆண்டான் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள நீ தவம் செய்தாய்!

நீ இறந்த பின் நான் உயிரோடு இருக்கலாம் என நீ எண்ணுவது நீ உயிரோடு இருக்கும் போதே உன்னை அகற்றி விட்டு நான் அரசாள்வது போன்றதே என மனம் நைந்து உள்ளம் உடைகிறான் சத்ருக்னன்.

அண்ணன் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை சத்ருக்னனின் நெஞ்சை பிழிகிறது.

கம்பனின் வரிகளில் காண்போமா!

*கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப் பின்பு போனானும் ஒரு தம்பி:* *போனவன்தான் வரும் அவதி போயிற்று என்னா,ஆனாத உயிர்விட என்று அமைவானும் ஒரு தம்பி:* *அயலே நாணாது,யானாம் இவ்வரசாள்வென்?என்னே இவ்வரசாட்சி! இனிதே அம்மா!*

*மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து
வாழ்ந்தானே,பரதன் என்னும் 
சொல் நிற்கும் என்றஞ்சிப் புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கினாயே.!என்னின்பின் இவன் உளனாம் என்றே உன்
அடிமை உனக்கு இருந்ததேனும்
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ்
இருப்பதுவும் ஒக்கும் என்றான்.

சகோதரத்துவத்தின் மேன்மையினை -மிக நேர்த்தியாக கம்பனைத்தவிர வேறு தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. அதனால் தான் என்னவோ பாரதியும்  *யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல* என முதன்மையாக வைத்து போற்றினான் போலும்!!

*கம்பர் புகழ் வாழ்க

கம்பர் கவி மலர் தொடரும்

தே.இரா.வீரராகவன்


No comments:

Post a Comment