ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !
இவ் வார கம்பர் கவி மலரில் சூர்ப்பணகை என்ற பாத்திர படைப்பையும், சூர்ப்பணகை மூலமாக கம்பர் அளிக்கும் நகைைச்சுவை விருந்தையும் பருகி மகிழ்வோம்.
இராமாயணக் காப்பியத்தின் முதல் திருப்புமுனையாக கைகேயி என்ற பெண் விளங்குகிறாள்.
காப்பியத்தின் இரண்டாம் திருப்புமுனையாக சூர்ப்பணகை என்ற பெண் விளங்குகிறாள்.
சூர்ப்பணகை என்பவள் அரக்கி; ராவணனுடைய தங்கை என்ற அளவில்தான் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம்.
இராமாயணத்தில் அதிகம் அறியப்படாத பாத்திரங்களுள் சூர்ப்பணகையும் ஒருத்தி.
சூர்ப்பணகை அவள் தன் தாய் கேசி, பாட்டி ஆகியோர்களை விடவும் அழகில் விஞ்சி இருந்தாள்.
தன் தங்கையை சிறந்த வீரனுக்கு மணமுடிக்க எண்ணி கால்கை நாட்டின் மிகச் சிறந்த அசுரக் கூட்டத்தின் படைத்தலைவனாக இருக்கக்கூடிய வித்யுத்ஜின்னுக்கு மணம் செய்வித்து மகிழ்ந்தான் ராவணன்.
இவ்விருவருக்கும் இடையே இல்லறம் இனிதே போய்க்கொண்டிருந்தது.
இராவணனுக்கு ஆணவம் மிகுந்து எல்லா நாடுகளையும் தம் வசமாக்கிக் கொள்ள முனைந்தான்.
அவ்வாறு போரிடும் பொழுது தனது மைத்துனன் நாடு என்றும் பாராமல் கால்கை நாட்டோடும் போரிட்டு,தன் தங்கையின் கணவனையும் சூழ்ச்சியால் வதம் செய்து கொன்றான்.
மணம் முடித்து வைத்த அண்ணனே தன் கணவனை சூதினால் வதம் செய்து விட்டானே என்று பித்துப் பிடித்தவள் போல அரற்றினாள் சூர்ப்பணகை.
என் கணவனை சூதினால் கொன்றதுபோல் தன் அண்ணனையும் சூதினால் கொல்வேன் என கணவனின் சடலம் முன் சபதம் ஏற்றாள்.
ராவணனுடைய வதத்திற்கு மறைமுகமாக தன்னைக் கருவியாக்க முனைந்துவிட்டாள்.
நோய் உடம்பிலேயே தங்கி தான் வெளிவரும் காலத்தை நோக்கி வெளியே வருவது போல ராவணனை மூல நாசம் செய்ய தகுந்த காலம் பார்த்து காத்திருக்கிறாள்.
"நீல மாமணி நிற நிருதர் வேந்தனை,மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்"
என்கிறார் கவியரசர்.
நிற்க,
சூர்ப்பணகையின் சில கூற்றுக்கள்
நகைச்சுவையின் உச்சத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.
இலட்சுமணன் அரக்கியின் மூக்கு முதலான அவயவங்களை அறுத்து எறிந்து விடுகின்றான். அவள் கதறி அழுகிறாள்.பிறகு சுதாரித்துக் கொண்டு எழுகிறாள்.அவள் பேசும் பேச்சு சிரிக்கத்தெரியாதவர்களைக் கூட சிரிக்க வைத்து விடுகிறது.
இராம,இலட்சுமணர்களைப் பார்த்து நீங்கள் என் உறுப்புகளை அரிந்ததன் நோக்கம் எனக்கு நன்றாகவே புரிகிறது.
இவ்வளவு அழகிய வடிவத்தை உடைய என்னை அயலான் நாடி விடக் கூடாது என்ற கருத்தில் தானே அரிந்தீர்கள்?
தங்களால் இயலாது என்றால் உங்களுடைய தம்பியையாவது மணம் செய்து வையுங்கள் எனக் கூறுகிறாள்.
மேலும்
மூக்கு இல்லாதவளோடு நான் எப்படி வாழ்வேன் என்று இலட்சுமணன் கேட்டால் இடையே இல்லாத சீதாவுடன் நான் வாழவில்லையா எனத் திருப்பிக் கேளுங்கள் என்கிறாள்.
"அரிந்த நாசி ஒருங்கிலா இவளொடும் உறைவெனோ?
என்பானேல்,இறைவ! "ஒன்றும் மருங்கு இல்லாதவளோடும் அன்றோ "நீ நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்"
என்ற கம்ப நாடனின் வரிகள் நகைச் சுவையை ஊட்டி இன்புற வைத்து விடுகிறது.
கம்பன் புகழ் வாழ்க!
கவி மலரின் மணம் தொடரும்.
தே.இரா.வீரராகவன்.
21-11-19
மிக சிறப்பு
ReplyDelete