Tuesday, November 12, 2019

கம்பர் கவி மலர் 14-11-19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கவி மலரில் உயர்திணை அல்லாத பறவைகளின் உறவின் உயர்நிலையை உணர்ந்து மகிழ்வோம்.

உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத குடும்ப அமைப்பு -குடும்ப உறவுகள் நம் பாரதப் பண்பாட்டின் மையமாக மலர்ந்து காணப்படுகிறது.

இவ்வுறவின் உயர்வுக்கு பண்டைய காப்பியங்கள் ,மற்றும் அவ்வப்போது வாழ்ந்த மஹான்கள்,புலவர்கள் ஆகியோரின் அரும்பணியே காரணம் எனலாம்.

உறவுகள் என்பது உயர்திணை ஆகிய மனிதர்களுக்கே உரியது என நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.இது பொதுவான நியதி.
ஆனால் கம்பன் இப்பொதுவான நியதியை மாற்றி பறவைகள் விலங்குகள் இவற்றிடமும் கூட உறவுமுறை பின்னிப் பிணைவதாக அமைத்து தமது இராமாவதாரத்தில் மெருகேற்றுவதை கண்டு வியக்கிறோம்.

சம்பாதியும்,ஜடாயுவும் கழுகு இனத்தில் உடன்பிறந்த சகோதரர்கள்.

ஒருவருக்கொருவர் தம்நலத்தை விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள்.
ஒரு சமயத்தில் ஜடாயுவும், சம்பாதியும் சூரியனை நோக்கி மேலே பறந்து செல்கிறார்கள்.

சூரியனுடைய வெப்பம் ஜடாயுவை மிகவும் வருத்துகிறது.இதைத் தாங்க முடியாத சம்பாதி வருந்தி
தனது சிறகுகளை குடையாக்கி தம்பியைக் காத்தான்.

இம் முயற்சியில் சூரியனின்வெப்பம் தாங்க முடியாத சம்பாதியின் இறகுகள் கருகி வீழ்ந்தன.
சம்பாதியும் கீழே விழுந்தான்.

தம்பியைக் காப்பாற்ற உயர்ந்த அண்ணனாக -சகோதரத்துவத்தின் உருவகமாக சம்பாதி விளங்குவதை வியந்து மகிழ்கிறோம்.

மற்றோர் இடத்தில் ஜடாயுவின் மீது காட்டும் உன்னதமான சகோதர வாஞ்சை வெளிப்படுகிறது.

சீதையைத் தேடித் தென்கடற்கரையை அடைந்த வானரர்கள் சீதாவை எங்கும் காணாமையால் மனம் தளர்ந்தார்கள்.

அங்கதன்,ஜாம்பவான் முதலியோர் தங்கள் உயிரை விடத் துணிந்தார்கள்.

அப்போது அநுமன் அவர்களைப் பார்த்து வீரவுரை நிகழ்த்துகிறான்.
"நீங்கள் இப்படி மனம் தளரலாமா!
சீதையைத் தேடும் முயற்சியில் ஜடாயுவைப் போல போரிட்டு உயிர் துறப்போமானால் அது தான் பெருமை என்கிறான்.

ஜடாயுவைப் போல உயிர்துறப்போம் என்ற அநுமனின் உரையைக் கேட்ட அளவில் சம்பாதி
இடியினால் சுக்குநூறான மலையைப் போல மனம் கலங்கினான்.
பிறகு மனம் சம நிலை அடைந்தவனாய் அநுமனைப் பார்த்து ஜடாயுவை வீழ்த்தியவன் யார் எனக் கேட்க அநுமன் முழுமையாக எல்லாவற்றையும் கூறுகிறான்.

இதைக்கேட்ட சம்பாதி ஜடாயுவை நினைத்துப் பலவாறு புலம்பி விட்டு தன் உயிரைப் போக்கிக் கொள்ள முற்படுகிறான்.

அநுமன் தடுத்து நிறுத்தி உங்கள் சகோதரன் , இராமருடைய திருப்பணி நிமித்தமாக உயிர்விட்டு மிக உயர்ந்த பரமபதம் அடைந்துவிட்டார்.
அதனால் நீர் வருந்தாதீர்! உமது அரிய உயிரைப் போக்க முனையாதீர் என்று கூறுகிறான்.

சம்பாதியும், என் தம்பி ஜடாயு ஸ்ரீ ராமனுடன் உறவு கொண்டாடி, அவனுக்காக தன் உயிரையே மன நிறைவுடன் விட்டான்.
இப் பேற்றைக்காட்டிலும் சிறந்த இன்பம் எனக்கு வேறொன்றும் இல்லை எனக் கூறுகிறான்.மேலும் ஜடாயுவுக்கான நீர்க் கடன்கள் முதலான இறுதிக் கடன்களை செய்து மன நிறைவு கொள்கிறான்.
இக்கருத்துள்ள கம்பனின் அழகிய பாடலைக் காண்போமா!

அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு உறவு உன்னா,
உயிர் ஒன்ற ஓவினான்;
பெற ஒண்ணாது ஓர் பேறு பெற்றவர்க்கு இறவு என் ஆம்?
இதின் இன்பம் யாவதோ?'

ஜடாயு சீதையைக் காக்க முயன்று உயிரை இழந்தான்.
சம்பாதியோ சீதை இலங்கையில் இருப்பதைத் தெரிவித்து வானர வீரர்களின் உயிரைக் காத்து உயர்வடைந்தான்.

ஆனால் கவி அரசர் கம்பரோ மானிடத்தை உயர்த்திட பறவைகளின் பாசப் பிணைப்பைக் காட்டி  என்றும் அழியா நிலைத்த புகழைப் பெற்றார்.

கம்பர் புகழ் வாழ்க!

கவி மலரின் மணம் தொடரும்

தே.இரா.வீரராகவன். 

1 comment: